Sunday, February 6, 2011

மகரந்த மெத்தை...


கடந்த சில நாட்களாய் உரு போடப்பட்ட எண்ணங்கள் மீண்டும் எழுத்துக்களாய் இங்கே.. உணர்வுகளால் உந்தப்பட்டு எதிலுமே மனம் லயிக்காத அந்த நிலையை ஒரு வார காலம் போராடி பணிய வைத்துவிட்டேன்.. எனக்கு எழுதுவதில் உள்ள நாட்டம் வேறெதிலும் இருந்ததிலலை.. சூழ்நிலை கருதி நாம் காத்த மௌனங்களை எழுத்தில் வார்க்க தமிழை விட ஒரு சிறந்த மொழி நானறிந்த வரையில் இல்லை.. எனவே என் தாயளித்த தமிழிலேயே இந்த வலைப்பதிவை பதிக்க ஆசைக் கொண்டு எழுதுகிறேன்.. நிலம் தொட்ட நாள் முதல் இது நாள் வரையில் நான் பயணித்த பாதையில் கண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. சில சம்பவங்கள் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கலாம்... சில உங்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கலாம்.. என் எழுத்துக்கள் உங்களுக்கு ஏதோ வகையில் நன்மை பயக்குமெனில் மெத்த மகிழ்ச்சியடைவேன்.. எந்த விஷயத்தை எடுத்தாலும் மனமூன்றி செய்ய வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணம் கொண்டவன் நான்.. நமக்காக நாம் செய்யும் எந்த ஒரு செயலிலும் உண்மையும், நேர்மையும் இருந்தால் மட்டுமே மற்றவரிடத்திலும் நாம் அவற்றை எதிர் பார்க்கமுடியும்.. அந்த வகையில் நிறைய சந்தர்ப்பங்களில் நாம் நம் உணர்ச்சிகளை விற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. தனிமையில் நாம் அதற்காக வருந்தினாலும், வாழ்க்கையின் சுழலில் நாம் அனைவரும் நடிகர்களே.. இல்லையென யாராலும் மறுக்கவே முடியாத தீர்க்கமான உண்மை இது.. தாயின் கருவில் உதிக்கும் போதே நமக்கான பயண அட்டவணை குறிக்கப்பட்டு விடுகிறது.. என் வாழ்விலும் நான் எதிரேபாராத ஏற்ற இறக்கங்கள்.. இறக்கங்கள் ஏற்றங்களை மிஞ்சி பீடு நடை போடும் போது, உண்மையில் வாழ்வில் பிடி கொஞ்சம் தளரவே செய்கிறது.. இரவில் பஞ்சணையின் அரவணைப்பில் உறங்க வேண்டிய உள்ளம், விடியாத பொழுதுக்கான கவலையில் மூழ்க ஆரம்பித்து விடுகிறது.. இயந்திரத்தனம் நிறைந்த வாழ்க்கையில், எல்லோருடனும் சிரித்து பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. ஒருவர் மேலுள்ள காழ்ப்புணர்வு துணில் சிம்மம் போலவும்; சிலையில் தேரைப் போலவும் நமக்கே தெரியாமல் வளரவே செய்கிறது.. இதை நாம் உணர்ந்து முளையிலேயே கிள்ளியிருந்தால், உலக வரலாற்றில் போர் முரசுகள் எகத்தாளமிட்டிருக்காது..நாம் தினம் நம் வாழ்க்கை பயணத்தில் மனதிற்கு ஒப்பாத விஷயங்களை கண்டு ஜீரணிக்க ஜீரணிக்க, நம் அவையங்களையும் ஒரு நாள் ஜீரணித்து ஏப்பம் விடக்கூடும்.. இவற்றையெல்லாம் நான் சம்பந்தமேயில்லாமல் இங்கு பிதற்றுவதாக நீங்கள் நினைக்கக் கூடும்.. நான் இங்கு எனக்காகவே வாழ விரும்புகிறேன்.. நான் உண்மையில் உணர்ந்தவற்றை இங்கு கூறுகிறேன்.. வலியறியாது; சுவையறியாது; கபடமறியாது; சூதறியாது நான் 10 மாதங்கள் வசித்து வந்த என் தாயின் கருவறை வாசம் மீண்டும் எனக்காய் வேண்டும்.. அங்கே நான் போலியாய் சிரித்ததில்லை; புறம் பேசியதில்லை; மனிதனாய் வாழ்ந்ததில்லை; உண்மையை மறைத்ததில்லை; உணர்வுகளை விற்றதில்லை.. ஒவ்வொருவரின் ஆதி கால சொர்க்க வாழ்வின் விலாசம் - தாயின் கருவறை - ஒரு மனிதனின் மகரந்த மெத்தை..

இன்னும் துடிக்கும்...