Sunday, February 24, 2013

கனவு மெய்ப்பட வேண்டும்

எங்கு தொடங்குவது? எப்படி தொடங்குவது? எதற்காக வலைப்பதிவாளனாய் உனக்கொரு அவதாரம்? என்ன சாதித்து விட்டாய்? யாரை வாழ வைத்திருக்கிறாய்? யாரெல்லாம் உன்னால் புன்னகையை தத்தெடுத்திருக்கிறார்கள்? உன் வெற்றிகள் என்னென்ன? உன் கண்களின் ஈரத்தைப் பிரதிபலிக்கும் கண்கள் எத்தனை? - இப்படியாய் கேள்விகள் ஜனித்தும், கரைந்தும் கொண்டிருக்கின்றன என்னுள், காற்றினால் நுகரப்படும் நீர்க்குமிழிகளாய்.. பாடுவதைக் காட்டிலும், எழுதுவதில் எனக்கிருந்த ஆர்வத்தைத் தழுவி உச்சி முகர்ந்த எட்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை திருமதி பிரபாவதி அவர்களை இக்கணம் மானசீகமாய் வணங்குகிறேன்.. உணர்ச்சிகள் பிரவாகமாய் எழும் போது அவற்றை அணையிட்டு வெற்றிக் கொள்ள நானறிந்த சூத்திரங்கள் இரண்டு மட்டுமே - பாடுவதும், எழுதுவதும்.. அவ்வாறான ஒரு உணர்ச்சி உலையில் என் மனது உழன்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இசை மகளை சரணடைந்தால், உலையில் மேலும் தீயிடுவாளென்பதாலேயே என் மைக்கோலால் மெய்க்கோலமிட முயல்கிறேன்.. மனிதனின் தீர்மானங்கள் எங்கெல்லாம் செல்லுபடியாகிறதோ அங்கெல்லாம் காலத்தின் நொடிமுள் தன்னை மறைத்து மெல்லிதழ்களை மட்டுமே விரித்திருப்பது உறுதி.. எத்தகைய முயற்சியும், காலத்தின் ஒப்புதலின்றி கைக் கூடுவதில்லை... நான் என் கல்லூரி நாட்கள் முதற்கொண்டு பல்வேறு விஷயங்களின் செய்து வரும் முயற்சிகள், என்னை தலைக்கனம் கொண்ட ஒரு அறிவிலியாகவே என்னை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றன.. கனவுகளின் குவியலாகவே என்னை நான் எப்போதும் எண்ணிக்கொள்வேன்.. கல்லூரி நாட்களில் 2 காற்சட்டைகள் மட்டுமே இருந்தபோதும், கோவிலில் என் தந்தைக்கு அளித்த அந்த வேட்டியை பொய்க்காரணங்கள் சொல்லி எனக்காய்ப் பெற்று எங்கு சென்றாலும் அதையுடுத்தியே சென்ற போதும், நண்பர்கள் நான் வேட்டியிலேயெ பெரும்பாலும் இருப்பதற்கான காரணத்தைக் கேட்ட போது, 'பெரிய மனுஷனாய் வேஷ்டி தான்டா நம்மள காமிக்கும்' என்று அவர்களை  சமாளிக்கும் போதும், எனக்கு எல்லாமுமாயிருந்த என் பாட்டனார் என்னை நீங்கி வானுலகம் சென்ற போதும், கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல் போன போதும் தற்போது எனக்குள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த தொடர் மன அதிர்வை உணர்ந்ததில்லை.. இப்போது தான் காலத்தின் வீரியத்தை நான் உணரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.. இதுவரையில் நான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில், என் காற்சுவடுகள் முழுதாய் எனக்கு புலப்படவில்லை.. அங்கொன்றும், இங்கொன்றுமாய் என் காற்சுவடுகள்.. மற்றவை எல்லாம் என் வாழ்வை அழகாக்க வந்த தேவதைகளினுடையவை.. எவ்வளவு விஷயங்களை பக்குவமாய் என்னை உணரவைத்திருக்கிறார்கள் அவர்கள்.. எனக்குள் நானே அறியாமல் உரமிட்டு வளர்த்து வைத்திருந்த செறுக்கெனும் களைப் பயிர்களை, என் வாழ்வில் அவர்கள் ஒவ்வொருவரின் பாத்திரம் முடியும் போதும் பறித்தழிக்கத் தவறியதில்லை.. என் நிறைகளை அனுசரித்து, குறைகளை அவர்கள் அங்கலாய்த்த போதெல்லாம் அவர்களுக்கு செவிமெடுக்காத நான், அவர்களால் உண்டான வெறுமையை இன்றளவும் சிறை பிடித்து, என்னிதயக் கூட்டில் பூஜித்து வருகிறேன்..ஏனோ தெரியவில்லை இப்பதிவை கோர்க்குமிக்கணத்தில், உடல் வியர்த்து, கண்கள் பனித்து, ஒருவிதமான ஒவ்வாத நிலை என்னை கவ்வியுள்ளது.. எனக்கெதிரான சில விமர்சனங்கள், என்னை இவற்றை அசைபோட வைத்ததாய் நான் நினைத்தாலும், அவ்விமர்சனங்களையும் மீறி அவற்றுள் நிறைந்துள்ள நிதர்சனங்கள் என்னை உறுத்தவே செய்கின்றன.. என்னை இதுவரையில் சரியாகவே நான் முன்னிறுத்தவில்லையென்று புரிகிறது.. எவ்வளவோ வசவுகள் என்மீது சாட்டையாய் முத்தமிட்டபோதும் கலங்காத என் கண்கள், இன்று மாறிவிட்ட காட்சிகளால் என்மீது வைக்கப்பட்டுள்ள சில முறையீடுகளால் செந்நீரை வடித்துக் கொண்டிருக்கிறது.. வெற்றிடங்களை மட்டுமே பூஜித்து வந்த எனக்கு, அவற்றில் குறிப்பாய் விடப்பட்டுள்ள விஷயங்களை உணர முடியவில்லை.. தத்துவங்கள் எப்போதுமே மனிதனுக்கு உதவியதில்லை நிஜத்தில்.. பிரச்சினைகளின் மூலத்தை கண்காண விடாமல், வேறு பாதையில் கடத்துவதே ஒரு தத்துவ ஞானியின் கைதேர்ந்த வேலை.. எனக்கான பிரச்சினைகளின் தீர்வுகள், நான் மட்டுமே அறிந்த ரகசியங்கள்.. எனக்கான காலம் கனிந்து சமீபத்துக் கொண்டிருக்கிறது.. எனக்கான வெற்றி என்னவென்பதை என் மனம் மட்டுமே வரையறுக்கும்.. அதுவே என் பிறப்பின் நோக்கம்.. என் வெற்றிகள் என்னுள் புதைந்து போக நான் ஒரு போதும் அனுமதிய மாட்டேன்.. எனக்கான இடையூறுகள் காலத்தால் எனக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைச் சட்டங்கள்.. இலக்கை அறிவதைவிட இத்தடைகளை தாண்டிச் செல்வதில் தான் எத்தனை திருப்தி.. என்னை முற்றுமாய் அறிந்தவர்கள், என்றும் என்னை விட்டு விலகுவதில்லை.. ஒவ்வொரு தடைச்சட்டத்தை நான் தாண்ட முயற்சிக்கும் போதும், என் பலத்தை எனக்கு ஊக்கத்தால் உணர வைப்பவர்கள் இவர்கள் தான்.. எண்ணிக்கையில் விரலளவாயினும், அவ்வூக்கம் வானளவு... ஒரு புதிய அவா என்னுள் மேலோங்கி நிற்கிறது இன்று.. நான் நானாய் இருந்த காரணத்தால், சந்தர்ப்ப வசப்பட்டும், காலத்தின் கண்பட்டும் எனக்கு அந்நியமாகிப் போனவர்கள் ஏதோ ஒரு உந்துதலால் என் வட்டத்துக்குள் வந்து சேர்ந்து, மனதின் அறைகளில் அவர்கள் நிரப்பித்த வெற்றிடத்தை, அவர்களே கரைக்கவேண்டும்.. நீட்டித்த கனவின் நிஜத்தில் இன்னுமொரு கனவு.. அதற்குப் பலவண்ணப் பூச்சிடக் காலத்தின் தூரிகையைத் தேடி இன்னுமொருப் பயணம்..

- இன்னும் துடிக்கும்..